Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

Ilamayil kal

Topic started by sivank on Tue Jul 7 4:18:05 2009. [Full View]

இளமையில் கல்

காலேஜ் ரோடு முனைக்குள் நுழையும் போதே பள்ளிக்கூட மணி அடித்தது மூச்சிறைக்க ஓடி வந்த செல்விக்கு கேட்டது. இன்றைக்கும் லேட்டாக வருவதற்க்கு கை முட்டியிலேயே அடிப்பார் வகுப்பாசிரியர் நடராஜன். பெயரில் இருந்த செல்வம் அவளது வீட்டில் இல்லாததால், தாய் அஞ்சலைக்கு உதவியாக சில வீடுகளில் வேலை செய்து விட்டு கிளம்புவதற்க்குள் அநேக நாட்கள் நேரமாகி விடுகிறது. இன்று நேரத்துக்கு போயிருக்க வேண்டியவளை தரை சரியாக துடைக்கவில்லை என்று மறுபடியும் துடைக்க வைத்தது அவளது ஆசிரியர் நடராஜனின் மனைவி தான்.

இறை வணக்கம் முடிந்து ஆசிரியர் அறையிலிருந்து மெதுவாக தன் கிளாஸுக்கு கிளம்பிய நடராஜனை பார்த்த சக ஆசிரியர் சிகாமணி," இந்த பசங்கள கண்டாலே ஒரே ரோதனையா இருக்குப்பா, ஒரு கிளாஸ்ல 70 பசங்கள வச்சுகிட்டு நான் படற பாடு எனக்கில்ல தெரியும். இங்க வந்தா பசங்க ரோதனை, வீட்டுக்கு போனா அங்கேயும் ரோதனை, பேசாம லாங் லீவு போட்டுட்டு கொஞ்ச நாள் சொந்த ஊர பாக்க போலாம்னு இருக்கம்பா."

சிகாமணியை கொஞ்சம் கடுப்புடன் பார்த்த நடராஜன்," உனக்கென்னப்பா, நீ நெனச்சா ராஜா மாதிரி மாமியார் வீட்டுக்கோ, இல்ல சொந்த ஊருக்கோ போயிடுவ. என்னால அப்படி எங்கயும் நகர முடியாது. நானும் ஏதோ ஆசை அவசரத்துல எல்லாரும் கட்டறாங்களேன்னு ஹவுஸிங் லோன் வாங்கி இந்த சனியன் புடிச்ச வீட்டை கட்ட ஆரம்பிச்சேன், வேலை பாட்டுக்கு போய்கிட்டு இருக்கு, இன்னும் ரூஃப் கூட முடியல. மேஸ்திரிய கேட்டா, இப்போ அப்போனு சொல்றார தவிர சரியா ஒரு பதிலும் கொடுக்காம இழுத்து அடிக்கிறாரு," என்ற நடராஜனின் கண்களில் பம்மி பதுங்கி செல்லும் செல்வியின் உருவம் தெரிந்தது.

வெய்யிலில் முட்டி போட்டு இருந்த செல்விக்கு கண்கள் இருட்டியது. காலையில் வழக்கமாக குடிக்கும் நீராகாரமும் இன்று குடிக்கவில்லை. அம்மா வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்படும் பழைய சாப்பாட்டை பார்த்தாலே குமட்டி கொண்டு வரும். நாய்க்கு போடுவதற்க்கு பதில் அவர்களுக்கு கொடுப்பதாக அவளுக்கு தோன்றும். இம்மாதிரி வீட்டு வேலை செய்ய வர மாட்டேன் என்று அடம் பிடித்த செல்விக்கு கிடைத்தது அப்பனின் அடியும், தாயின் அழுகையும் தான். செல்வியின் தகப்பன் மாயகிருஷ்ணன் சுப்பையா மேஸ்திரியிடம் வாட்சுமேனாக வேலை செய்து வருகிறான். மேஸ்திரி ஒரே சமயத்தில் நாலு வீடுகளை ஒரே தெருவில் கட்ட ஒத்து கொண்டதால் அந்த தெருவிலேயே ஒரு குடிசை போட்டு தங்கி விட்டான் மாயன். செல்விக்கு படிப்பதில் மிகுந்த ஆசை. அவளுடைய பழைய பள்ளிகூடத்தில் ஆசையோடு படித்து வந்தவளை இந்த பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்து விட்டது விதி.

மணி அடித்து நடராஜன் வெளியேறிய பின்னர் வகுப்புக்குள் நுழைந்த செல்வியின் பின்னாலே உள்ளே வந்தது தமிழாசிரியர் கைலாசம். அவர் அவளை பார்த்த பார்வையில் கனிவு இருந்தது. கையில் கட்டாக மாத தேர்வின் விடைதாள்களை வைத்து இருந்தவர் அவளை அப்படி பார்த்தது ஆனந்திக்கு எரிச்சலை மூட்டியது. நடராஜனின் மகளாக இருந்தாலும் படிப்பில் நாட்டம் இல்லாத ஆனந்திக்கு தெரு விளக்கில் படிக்கும் செல்வியின் கல்வி ஏக்கம் கோபத்தை கிளறியது. தாயிடம் சரியாக போட்டு கொடுக்க, சரோஜாவும் அவளை சரியாக வேலை வாங்கினாள். வேதனை தாளாமல் அழும் செல்வியை அவ்வப்போது சர். முத்துசாமி அய்யரை பற்றியும், ஆப்பிரகாம் லிங்கனின் வாழ்வை சொல்லி தேற்றுபவர் கைலாசம்.

டப்பா கட்டு கட்டியிருந்த வேட்டியை நடராஜனை கண்டதும் கீழே இறக்கிய சுப்பையா மேஸ்திரி," எல்லாத்தையும் தயார் பண்ணிடேங்க. அலமாரிக்கி தேவையான கோழி வலை, சென்ட்ரிங் போட பலவா, மரம், ரூஃபிங்குக்கு தேவயான லின்டலு எல்லாம் ரெடின்ங்க. ஆனா, சொன்டி கல்லு உடைக்க மட்டும் சித்தாள் இல்லிங்கோ நம்ளாண்ட. அது மட்டும் அமைஞ்சது நம்ம வூட்டு வேலைய அம்சமா முடிச்சடலாமுங்கோ."

"ஆமாம், நீயும் இப்படியே சொல்லு, நானும் அப்படியே கேட்டுகிட்டு இருக்கேன். பக்கத்து வீட்டு வெங்கடேசன் வேலையெல்லாம் ஜரூரா நடக்குது. என் வீட்டு வேலைக்கு மட்டும் ஆள் கிடைக்க மாட்டேங்குது இல்ல."

"அப்படி இல்லீங்க மொதலாளி, நெசம்மாலுமே இப்ப ஆள் கிடைக்கறது கஷ்டமா இருக்குது. முன்ன எல்லாம் நெதமும் காலைல அந்த வாராவதி பக்கத்துல நின்னுகிட்டு இருப்பாங்க, இப்ப.." என்ற மேஸ்திரியின் கண்ணில் பட்டது மாயகிருஷ்ணன்.


ஒரு புடவையை படுதா போல் போட்டுக்கொண்டு அதன் நிழலில் கல் உடைத்து கொண்டிருந்த செல்விக்கு திடீரென நேற்று கைலாசம் சொல்லி கொடுத்த ஔவையாரின் இளமையிற் கல் பாடம் நினைவிற்க்கு வந்து அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum