Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

samAthAnangaL

Topic started by P_R on Fri Jun 5 3:06:10 2009. [Full View]

சமாதானங்கள்

இதுதானா என்று சரியாகத் தெரியவில்லை. 16க்கும் 17க்கும் இடையில் 16 A வைக் காணோம்.

16க்கும் 17க்கும் இடையிலான ஒற்றைச் சுவரை ஒட்டி ஒரு தனி கேட். பதினாறில் தானும் சேர்த்தி என்பதன் நிரூபணமாக, காரை அடைத்து நின்ற பதினாறின் கேட்டில் உள்ள இரும்பு மலர் தோரண வரிசை இதில் சின்னதாக இருந்தது. அதற்குப் பின்னிருந்த இரண்டடி அகலச் சந்து பின்சுவர் வரை ஓடியது. பதினேழை ஒட்டிய தரையில் ஈரத்தடமும், அதன் துவக்கத்தில் ஒரு அடிபம்பும் தெரிந்தன.

அதன் எதிரே பதினாறின் பக்கச்சுவற்றில் கதவுபோல தெரிந்தது. சற்று உள்ளே இருந்ததால் இங்கிருந்து தெரியவில்லை. வலப்பக்கம் நகர்ந்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றால் அதற்குள் பதினேழு தடபுடலாக எழுந்து மறைத்தது.

இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று இரும்புமலருக்குள் கைவிட்டு உள்ளே போடப்பட்டிருந்த உள்தாழ்ப்பாளைத் தளர்த்தினேன். தெரியாத கதவுகளைத் திறக்க இந்த மூன்றாண்டு விற்பனை அனுபவம் கற்றுத்தரவில்லையென்றால் எப்படி ?

கொதிக்கும் தாழ்ப்பாள் க்ரீச்சிட, “யாருங்க ?” என்றது ஒரு குரல். பதினாறு. தார்ப்பாலின் போர்வையிடப்பட்ட காரைத் தாண்டிஒரு ஜன்னல் இருப்பதையே அப்போதுதான் கவனித்தேன். அதிலும் அதே இரும்புமலர். மூக்கும் முழியும் மட்டுமே தெரியும் பெண்மணி. இன்னும் வெயில் தாழவில்லை.

அனிச்சையாக “நான் லோட்டஸ் மார்க்கெட்டிங்லேர்ந்து…” என்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கி “இங்க 16A ….? கண்ணன்னு சொல்லி…” என்று நான் இழுத்தேன்

“ஆங் இதாங்க…ஆனா அவங்க இப்ப ஒரு பங்க்ஸனுக்கு போயிட்டாங்களே…”
“ஓஹோ அப்ப ஃபங்க்ஷன் வீட்டுலெ இல்லீங்களா ?” என்று பாக்கெட்டுக்குள் கையை விட்டு செல்ஃபோனை எடுத்தேன். மானேஜர் பயலுக்காக அணைத்து வைத்திருந்தேன்.
“இல்லீங்க..பங்க்ஸன் அவுங்க மச்சான் வீட்டுல நடக்குது” குரல் கொஞ்சம் சகஜமாகியிருந்தது.

மச்சான் வீடா ? செல்ஃபோனை உயிர்ப்பிக்க, பல எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியிருந்தான் மானேஜர். கடைசியில் “வேர் ஆர் யூ” என்று கண்ணன். அவனுக்கு அடித்தேன்.

“இங்க பக்கத்துலதான் அவுங்க அண்ணென் வீடு…நாங்களும் அங்கதான் கிளம்பிக்கிட்டிருக்கோம் “ என்று கதவைத் திறந்து காரருகில் வந்தார் அந்தப் பெண்மணி.

முதல் மணியிலேயே எடுத்துவிட்டு “எங்கடா இருக்க ?” என்று நேராகக் கேட்டான்.
“உன் வீட்டு வாசல்ல…நீயி ?”
“அங்கயே இரு…இத வந்துட்டேன்” என்று தொடர்பைத் துண்டித்தான். நான் ஃபோனை கவனமாக அணைத்து பையில் போட்டுக் கொண்டேன்.

“நீங்க கண்ணன் ப்ரெண்டா ?”
“ஆமாங்க”
“வெளியூருங்களா ?”
கையில் ஒன்றும், காலடியில் ஒன்றுமாக பைகளோடு நிற்பதால் கேட்கிறாள். இந்தப் பைகளில், “இந்தக்கால குழந்தைகளின் பலதரப்பட்ட அறிவுத்தேடல்களை 50 சதவிகித தள்ளுபடியில் நிறைவு செய்யும், வழவழப்பான பக்கங்களில், படங்களுடன் கூடிய கெட்டி அட்டை முதுகுடைப்பான் புத்தகத்தொகுப்புகள் இருப்பது அந்த பெண்மணிக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அவளுக்குக் குழந்தைகள் இருக்கக்கூடும்; ஆனால் எனக்கு பயண அசதி.

“இந்தூர்லதான் இருந்தது...இந்த நேரு நகர்ல.இப்ப மதுரையில இருக்கோம்”
“ம்ம்”
“கண்ணன், ஸ்கூல்லேர்ந்து க்ளாஸ்மேட்டு” கேட்காமல் நானே சொல்வது போல இருந்தது.

மோட்டார்சைக்கிள் உறுமியபடி தெருவோரத்தில் திரும்பி நுழைந்தது. இன்னும் அப்பிடியேதான் ஓட்டுகிறான். என்னைக்கடந்து 17ம் வீட்டு சுவரருகே சாய்த்து நிறுத்தினான். முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு புதுவேட்டியின் வெள்ளை மிளிர இறங்கி வந்தான்.

“எத்தனை தரம்டா அடிக்கிறது உனக்கு” என்று என் மூட்டையில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, 16 A கேட் என்று நிரூபணமாகிவிட்டதைத் திறந்து உள்ளே நடந்தான். “ரெடியா ?” என்று என்னைத் தாண்டி அவன் கேட்க “இந்தா…”என்று வீட்டுக்குள் மறைந்தார் நம்பர் பதினாறு.

“ஆன் ட்யூட்டி போட்டுக்கிட்டு வந்திருக்கேண்டா, அதான் ஃபோனை அணைச்சு வச்சிருந்தேன்” என்றபடி இரண்டடி சந்துக்குள் அவனைப் பின்தொடர்ந்தேன்.
“உன் ட்யூட்டியில் தீய வைக்க” என்று அடிபம்பின் எதிரிலிருந்த அந்தக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

ஒரே அறை தான் – எங்கு சமைப்பார்கள் ? மரபெஞ்சின் மீது நாளிதழ் அடுக்கியிருந்தது.சின்ன டி.வி. மீது சிரிக்கும் புத்தர். இரண்டு தகர மடிப்பு நாற்காலிகள் விரித்தே இருந்தன. என் மூட்டைகளைத் தரையில் வைத்ததும் தரையில் குறிபார்த்துத்தான் நடக்கவேண்டும். ஒரு நாற்காலியில் அயர்ந்து உட்கார்ந்தேன். அவன் ஸ்விட்சைப் போட ட்யூப்லைட் முனக ஆரம்பித்தது.

“உக்காராத….கிளம்பு” என்றான் அலமாரிக் கண்ணாடியைப் பார்த்துத் தலைசீவிக் கொண்டே
“எங்கடா நடக்குது ?”
“திவ்யா வீட்ல “ என்று இயல்பாக சொல்வதுபோல சொன்னான்.
“ என்னடா சொல்ற ”.
ஒரு குதூகலப் புன்னகையுடம் என் பக்கம் திரும்பி சொன்னான், “ஆமாண்டா, இப்ப கொஞ்ச நாளாவே அவ அண்ணி கூட ஃபோன்ல பேசுறது உண்டு. போன வாரம் அவ அண்ணன் அண்ணி ரெண்டு பேரும் வீட்டுக்கே வந்துட்டாங்க”

ட்யூப்லைட் உயிர்பெற்றது.
“ஃபங்க்ஷனா பண்ணனும் …அவுங்க வீட்ல வச்சு செய்யணும்னு சொன்னாங்க. சரிண்ட்டேன்….அவங்கதான் ஏற்பாடு பூராம் ”

எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, “ நாயே ! ஏண்டா முன்னமே எனக்கு சொல்லல……..ஏதோ வீட்டுலையே சின்னதா செய்யப்போறதாத் தானே சொன்ன ?”
“ஒரு சர்ப்ரைஸ்தான்” என்றவனுக்கு முகமெல்லாம் சிரிப்பு. இதற்கு மூன்று வருடம் ஆகியிருக்கிறது.
“புண்ணாக்கு சர்ப்ரைஸ்…..வேற ஏதும் சர்ப்ரைஸ் வச்சிருக்கியா ?”
நான் எதைக் கேட்கிறேன் என்று அவனுக்குத் தெரியும்.

“இல்லடா. அப்பா இன்னும் அப்பிடியேதான் இருக்காரு….நான் சொல்லச் சொல்ல கேக்காம திவ்யா அண்ணன் ஃபோன் போட்டாரு. அப்பா சட்டுண்டு ஃபோனை வச்சுட்டாரு……..அதுவும் சரிதான், அவர் ஏதாச்சும் அவ அண்ணனை சொல்லிருந்தாருன்னா எனக்கு சங்கடமாயிருக்கும்…….” என்றான்.
அவ்வளவாக வருத்தம் தெரியவில்லை.

“……கொஞ்சம் மாசம்டா…புள்ள பொறந்ததும் அம்மாவாச்சும் நிச்சயம் வரும் பாரு” என்று நம்பிக்கையோடு சொன்னான்.

எனக்கு இதுவே மிக சந்தோஷமாக இருந்தது “ ரொம்ப சந்தோஷம்டா !” என்று எத்தனையாவது தடவையாகவோ சொன்னேன்.

“பைய்ய சந்தோஷப்படலாம், இப்பொ கிளம்புடா..” என்று ஈரவாடை அடித்த ஒரு துண்டை என் மீது எறிந்தான். முகம் கழுவி, போட்டுக் கொண்டிருந்த உடையையே சரி செய்து கொண்டு கிளம்பினேன். அவன் அணைத்த போது மட்டும் உடனே கேட்டது ட்யூப்லைட்.

வண்டியில் ஏறியதும் பக்கத்துவீட்டிலிருந்து ஒரு ஆதிகால ப்ரீமியர் பத்மினி கிளம்பியது. முன்சீட்டில் ஒல்லியான ஒல்லிமீசைக்காரரும் அருகில் அந்தப் பெண்மணியும் இருந்தார்கள்.

“பின்னாடியே வாங்க சார்” என்று சொல்லிவிட்டு பைக்கை கிளப்பினான். “ஹவுஸ் ஓனர்டா…. நல்ல டைப்….இவங்க இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்போம்” என்று மெதுவாக பின்னால் இருந்த எனக்குச் சொன்னான். அவர்கள் தொடரப்போவதால் அவன் பறக்கப் போவதில்லை, அதனால் கொஞ்சம் நிம்மதியானேன்.

பிள்ளையார் கோயில் தாண்டியதும் எங்கள் ஏரியா. இங்கு பல வருடங்கள் பல வீடுகளில் இருந்தோம். நாங்கள் எல்லோரும் திரிந்தது இங்கு தான். கண்ணன் மட்டும் வேறு ஏரியா. பள்ளி, கல்லுரியில் என் வகுப்பு. எங்கள் குழுவில் சங்கமித்தான்.

இதோ, இதே தடங்களில் வண்டி ஓட்டிப் பழகியிருக்கிறோம். பெண்கள் எதிர்ப்பட்டால் கண்ணன் கொஞ்சம் வித்தை எல்லாம் காட்டுவான். திவ்யா வீட்டு வாசலைக் கடக்கும்போது கைப்பிடியிலிருந்து கைகளை விலக்கி சொடக்குப் போடுவான். அதை மிகுந்த அசட்டையுடன் செய்வான், இதேபோல் பின்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் ஏதோ பேசிக்கொண்டே. இந்த கழைக்கூத்தாடி வேலலக்கெல்லாம் பெண்கள் மயங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. இப்போது ‘நம்ப விரும்பவில்லை’ என்று மாற்றித்தான் சொல்லவேண்டும்.
பின்ன ? திவ்யாவுக்குப் பிடித்துப் போனது என்னவாம் ?



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum