Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

KaruvaNdu

Topic started by complicateur on Sat Mar 28 13:44:56 2009. [Full View]

"தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?" ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியை கேட்டாள் அரசிளங்குமாரி . கேள்வியோடு என் திசையில் ஒரு நமட்டுச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு என்னையே பின் தொடர்வது போல் ஒரு பிரமை. பிரமை என்று எனக்கே உறுதியோடு கூறுவது தான் எனது சமத்தை நான் காப்பாற்ற ஆட்கொண்ட யுக்தி. படைத்தலைவன் என் சலனத்தை உணர்ந்திருக்க வேண்டும். "நேரே பற, மலரைத் திற, தேனைப் பெற!" கூட்டுக் கோஷத்தை எழுப்பினான். வேட்டைப் படை உடனே பின் தொடர்ந்தது, "நேரே பற, மலரைத் திற....
'அம்சிரைத் தும்பி பேரன்' என்ற பட்டப் பெயருடன் தான் நான் கூட்டுப் பள்ளியில் நுழைந்தேன். ஒரு பெருமையின் கூறாக இருந்த சொற்கிரீடத்தில் விரைவில் இளக்காரக் கறை படியத் துவங்கியது, பள்ளியின் முதல் நாளிலே. என் பாட்டனாரிடம் சிவபெருமான் 'பெண்கள் கூந்தல் மணம்' குறித்து சந்தேகம் தீர்த்ததாக ஒரு கதை பரவலாகப் பேசப்பட்டது. பாட்டனுக்கு தெய்வக்குரல் கேட்டதோ இல்லையோ எனக்கு வயிற்றுக்கும் சிறகுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு உருளைத் தலை வந்து வாய்த்திருந்தது. பள்ளியில் தயங்கித் தயங்கிச் சேர்க்கப்படும் வரையில் நான் பொத்தி தான் வளர்க்கப் பட்டேன். பொத்தி வளர்த்தது பெருமைக்காக அல்ல பாதுகாப்பிற்காக என்று உடன் படிப்பவர்கள் உணர்ந்தவுடன் புறம்பேசும் குரல்களில் பொறாமை மறைந்து ஏளனம் அதிகரித்தது. எனக்கும் அந்த ஏளனம் அடிப்படையற்றது என்று தோன்றவே இல்லை. அந்த இராட்சசத் தலை காரணமாக எனது சக வயது வண்டுகளில் சிறகுகளை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவர்களில் கடை மாணவன் நான். கொடுக்கை சரிவர உபயோகிக்கவும் மற்றவர்களைக் காட்டிலும் வெகுவாக முயற்சிக்க வேண்டி இருந்தது. மீதமிருந்த குலப் பெருமையில் மட்டுமே என்னை தேன் வேட்டைக் குழுவில் சேர்த்திருக்க வேண்டும்.
தேர்ச்சி பெற்ற எந்த வண்டும் தேன் வேட்டைக்குச் செல்லாமல் இருப்பது கடினம். பெரும்பாலும் தேன் கிண்ணத்தையோ, சிறகையோ இழந்த வண்டுகள் மட்டுமே விதிவிலக்குகள். அதிலும் சிறகிழந்த மற்றும் அனைத்து கால்களையும் இழந்த வண்டுகள் மற்ற எந்த பணிக்கும் சேர்க்கப் பட முடியாது. மொத்த கூடும் ஒரு பாரமாகவே அவர்களைக் கருதியது. இதனாலே தேன் வேட்டைப் பயிற்சியின் முக்கிய பாகம் மனிதர்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தான். முதல் அறிவுரை தான் மிகவும் முக்கியம் - 'விலகியிருப்பதே வெற்றி'. இது தான் அந்த சுற்றுப்புற சூழல் அறியாத தாந்தோநிகளை கையாள கற்றுக் கொடுக்கப் படும் முக்கிய வழி. உயிர் பிரிவது சந்தேகமற்ற நிலையில் மட்டுமே கொடுக்கை பயன் படுத்த வேண்டும், ஏனென்றால் பயன் படுத்தியவுடன் உயிர் பிரிவது நிச்சயம். கடை நிலை தேன் கூட்டாளியாக தேர்ச்சி பெற நான் பட்ட பாடு எனக்கும் எனது இப்போதைய படைத் தலைவருக்கும் தான் தெரியும். "பாட்டன் பெயரை காப்பற்ற வேண்டும்" என்று மந்திரம் ஓதி மந்திரம் ஓதியே சொல்லிக் கொடுப்பார். எனக்கோ பாட்டன் மீதிருந்த வெறுப்பு படைத் தலைவர் மீதிருந்த மரியாதையை விட குறைந்தது. அந்த மரியாதையின் பொருட்டே பயிற்சி செய்தேன் - ஏதோ மாய தந்திரத்தால் அரசிளங்குமாரியின் தளபதியாரின் முன் சாகசம் செய்து தேர்ச்சியும் பெற்றேன். படைத் தலைவர் சந்தோஷப்பட்டார். தளபதியாரின் தேர்ச்சிப் பரிந்துரைக்குப் பின் அவரது சிறகு எவ்வளவு இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
முதல் தேன் வேட்டைக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவே இல்லை. நீ சிபாரிசில் தேர்ச்சிப் பெற்றவன் தானே என்று சகப் படையாளிகளின் குமுறல்கள் கேட்பது போல் பிரம்மை. ஆனால் போகாமலும் இருக்க முடியாது. காரணம் தேடும் வேளையில் தான் படைத் தலைவர் தனிமையில் ஒரு கருத்து சொன்னார். "நீ முதல் முறையாக கூடு விட்டு வெளியேறுகிறாய். உன் பாட்டனார் பெருமையை விட கூட்டிற்கு தேன் சேர்ப்பதே பெருமை. உன் பெயரும் புகழும் அதனின்றே பிறக்கட்டும்" என்று வாழ்த்தினார். நேற்று இரவு மனம் அவர் சொன்னதையே அசை போட்டது. ஒரு வேளை என் பாட்டனின் குரல் கேட்கும் சொத்து எனக்கிருந்தால்? நான் தேன் சேர்த்து பெருமை பெறுவது இந்தப் பிறப்பில் நடைபெறாது. அப்பொழுதுதான் தீர்மானித்தேன், பயிற்சி அனைவற்றையும் நிராகரிக்க.
...தேனைப் பெற!" நானும் கோஷத்தை முடித்துக் கொண்டே படையுடன் கூட்டினின்று வெளியேறினேன். ஒளி, மனம் அனைத்தும் பிரவாகமாகப் பெருக , படை தோட்டம் ஒன்றை நெருங்கியது. நான் மெல்ல படை அமைப்பிநின்று என்னை அப்புறப் படுத்திக் கொண்டேன். பல நேரம் பறந்தேன், தலைகனம் தாக்கத் துவங்கியது. சோர்வடையும் நேரத்திலே தோட்டத் தின் நடுவே மரமொன்று தென்பட்டது. மரத்தடியில் இரு மனிதர்கள் - ஒரு வாலிபன், ஒரு வயோதிகன். என்னை பாதை இறுதி கண்ட பயணாளியின் புதுத் தெம்பு தாக்கியது. வயோதிகன் வாலிபனின் மடியில் தலை சாய்த்து நித்திரையில் இருந்தது போல் அசையாமல் படுத்திருக்க, வாலிபன் அமர்ந்தபடியே கண் மூடியிருந்தான். நான் அருகே சென்றேன். ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வேளை முகமருகே சென்றால் தான் குரல் கேட்குமோ என்று காதருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. வாயருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. அந்த வாலிபன் நகருவது போலவும் இல்லை. பாட்டன் தற்புகழ்ச்சிக்கு சொன்ன பொய்யை எண்ணி கோபம் வந்தது. சிவபெருமான் மனித உருவில் பேசினாராம். அவர் பதில் கூறினாராம்! பொங்கிய ஆத்திரத்தில் கொடுக்கு வெளியேறியதும் வாலிபனைக் கொத்தியதும் எனையறியாமலே நடந்தன. உயிர் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. எங்கேயோ தூரத்து இடி முழக்கம் போல் ஒரு குரல் "இராதேயா நீ க்ஷத்ரியன் தானே?....



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum