Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

Sivasthaanam

Topic started by sivank on Tue Dec 30 15:34:19 2008. [Full View]

அடைக்கலம்

நிறைமாத கர்பிணியைபோல் 6வது மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற 18c யில் இருந்து இறங்கிய சியாமளாவிற்க்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. பஸ் ஸ்டாப்பில் போட்டிருந்த சிமென்டு பெஞ்சில் உட்கார்ந்தவளின் தோளை மெதுவாக தடவி கொடுத்த கீதா, "அம்மா, என்னம்மா பண்றது, வலிக்கறதா, சோடா வாங்கிண்டு வரட்டுமா? " என்றாள். பக்கத்தில் பராக்கு பார்த்து கொண்டிருந்த ஆறு வயது பாபு எனக்கும் சோடா என்றான். கீதாவின் கையை பிடித்தபடி எழுந்த சியாமளா மெதுவாக அருகில் இருந்த பெட்டி கடைக்கு வந்தாள். ஒரு பக்கத்தில் ஸ்வஸ்திக் சைக்கிள் மார்ட்டில் புஸ்க், புஸ்க் என சைக்கிளுக்கு காற்று அடித்து கொண்டிருந்தார்கள். பக்கதிலேயே செல்வம் காய்கறி மண்டியில் அண்ணாச்சி யாருடனோ, இதுக்கு மேல கம்மியா கொடுக்க முடியாதும்மா என்று சொல்லி கொண்டிருந்தார். சேஷாத்ரி டாக்டர் வீட்டு வாசலில் இந்த மத்யான வேளையிலும் சிலர் காத்து கொண்டிருந்தனர். எதிரிலேயே ரிக்க்ஷாகாரர்கள் வெயிலுக்கு பயந்து தங்கள் ரிக்க்ஷாவில் தஞ்சம் புகுந்தனர். 5 ஸ்டார் சோடா கடையில் சோடா குடிக்க தெரியாமல் தவித்து கொண்டிருந்த பாபு, வேகமாக குடித்து விட்டு பெரிதாக ஏப்பம் விட்ட கீதாவை கோவத்தோடு பார்த்தான். கொஞ்சம் தெளிவடைந்திருந்த சியாமளா கடைக்காரரை பார்த்து,"இங்க, வோல்டாஸ் காலனினு இருக்காமே, அதுக்கு எப்படி போகனும்?" என்று கேட்டாள்

இரண்டாம் கட்டு தபாலை வாங்கி வைத்துவிட்டு மணையில் தலை வைத்து படுத்திருந்த மங்களதிற்க்கு 58 வயதாகிறது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். கருணையான முகம் பாக்கியம் ராமசாமியின் சீதா பாட்டியை நினைவிற்க்கு கொண்டு வரும். வாழ்க்கையின் பெரும் பகுதியை கும்பகோணத்தில் கழித்து விட்ட மங்களம் கடந்த 2 வருடங்களாக மகன் ராகவனுடன் இருந்து வருகிறாள். நங்கநல்லூரில் நிலம் வாங்கி வீடு கட்டிய ராகவனுக்கு லோன் திருப்பி கட்டும் போது தான் சில விஷயங்கள் புரிந்தன. அதுவரை வீட்டோடு இருந்த மனைவி மைதிலி மறுபடியும் டீச்சர் வேலைக்கு போக ஆரம்பிதாள். கட்டிய வீட்டில் 2 ரூமை தனியாக பிரித்து வாடகைக்கு விட முடிவு செய்தான். ஸ்கூலுக்கு போகும் 16 வயது குமாரையும், வீட்டையும் பார்த்து கொள்ள ஆள் வேண்டாமா, கும்பகோணம் போய் சேதுராமைய்யரிடம் பேசி அம்மாவை அழைத்து கொண்டு வந்து விட்டான். மங்களத்திற்க்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. மெதுவாகத்தான் பிள்ளை அழைத்து வந்தது கனிவினால் இல்லை கணக்கினால் என தெரிந்தது. அப்பனை உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் அப்படியே உரித்து வைத்தவன் என புரிந்தது.

கும்பகோணத்தில் ஒரு காலத்தில் சமையல் சங்கரன் என்றால் ப்ரசித்தம். கை பக்குவம் எந்தளவு நன்றாக இருந்ததோ அதைவிட வாய் நீளம் ஜாஸ்தியாக இருந்தது. எங்கே போனாலும் ஏதோ ஒரு சண்டை போடாமல் திரும்பி வர மாட்டான். இஞ்சி தின்ற குரங்கு கள்ளையும் குடித்தது போல் சீட்டாட்டம் வேறு. மன்னார்குடியில் ஒரு கல்யாண சமையலுக்கு போனவன் திரும்பி வரவேயில்லை. சீட்டாட்ட ரகளையில் யாரையோ அடித்துவிட்டு ஓடிபோனவன் இன்று வரை எதுவும் தெரியாது. நாலு வயது குழந்தை ராகவனோடு நடுத்தெருவில் நின்றவளை ஆதரவு காட்டி தன் வீட்டில் சமையல் வேலைக்கு வைத்தவர் சேதுராமையர். அந்த பச்சையப்ப முதலி தெருவில் பெரிய வீடு அவருடையது தான். எடுக்க குறையாத செல்வம் இருந்தாலும் கொடுக்க தவறாதவர் அவர். வேலைக்காரியாக நடத்தாமல் தனது வீட்டு மனுஷியாகவே அவளை நடத்தினார்கள் சேதுராமையர், அலமேலு தம்பதியினர். மங்களமும் அண்ணா, மன்னி என்றே அவர்களுடன் பழகி விட்டாள். ராகவனை படிக்க வைத்து, சென்னையில் வேலை வாங்கி கொடுத்து, அவன் கல்யாணத்தை முன்நின்று நடத்தி கொடுத்ததே அவர்தான். ராகவன் இப்படி திடீரென்று மங்களத்தை அழைத்து போனதில் அவருக்கு கொஞ்சம் மன வருத்தம் தான்.

வாசல் கேட்டை டமாலென்று இடித்து திறந்து வந்த பேரன் குமார்," பாட்டி, உன்னை தேடி யாரோ வந்திருக்கா" என்றான். மங்களம் ஆச்சயர்த்தோடு "யார்ரா, என்ன தேடிண்டு வர போறா" என்று வாசலுக்கு வந்தவள் அப்படியே வாயடைத்து போய் நின்றாள். வாசலில் நின்ற சிறுவனை பார்த்தால் ராகவனை பார்ப்பது போலவே இருந்தது. திடீரென்று ஓடி வந்து காலை பிடித்தபடி தேம்பி தேம்பி அழும் பெண்ணை ஆதரவாக தூக்கி, மொதல்லே உள்ளே வா, என்று அழைத்தாள்.

சூடாக காபி குடித்த பின் கொஞ்சம் தெளிவாக இருந்த சியாமளாவை பார்த்த மங்களம்," நீ என்ன தேடிண்டு வந்ததா குமார் சொல்றானே, உன்ன எனக்கு முன்ன பின்ன தெரியாது, யாரும்மா நீ?" என்றாள். அந்த தெய்வீக முகத்தையும் கனிவான கண்களையும் பார்த்து மீண்டும் அழ தொடங்கிய சியாமளா, தான் பிறந்த, வாழ்க்கைபட்ட, அவதிபடும் கதையை சொன்னாள். "சீட்டாடத்துல தோத்த எங்கப்பாவுக்கு இருந்த ஒரே சொத்து நான் ஒருத்தி தான். தட்டி கேக்கவும் யாருமில்ல, ராவோட ராவா எனக்கு உங்களவரோட கல்யாணம் ஆகிடுத்து. அப்படி இப்படினு பாக்கறத்துக்குள்ளே ரெண்டு கொழந்தேளும் பொறந்தாச்சு. மூணு வருஷதுக்கு முன்ன இதோ வரேன்னு போனவர் என்ன ஆனார் ஏது ஆனார்னு தெரியல. 10 வயசு பொண்ணையும், 6 வயசு பையனையும் வச்சுண்டு ஏதோ காலத்த ஓட்டிண்டு வந்தேன். டாக்டர் எனக்கு கர்பப்பைல கான்ஸர் இருக்குனு சொல்லிட்டார். இனிமே நான் எத்தன நாள் இருப்பேனோ எனக்கு தெரியாது. பெருசா மருத்துவம் பாக்க வசதியும் கிடையாது. இன்னிக்கு சொந்தம்னு சொல்லிக்க உங்கள விட்டா வேற நாதி கிடையாது. அங்க இங்க அலஞ்சு கடசீல உங்க விலாசம் கண்டுபிடிச்சு வந்துட்டேன். என் குழந்தைகளை நீங்க தான் காப்பாத்தணும்".


அன்றிறவு யாருமே சரியாக சாபிடவில்லை. ஆபீஸில் இருந்து வந்த ராகவன் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தான். சட்டி மாதிரி முகத்தை வைத்து இருந்த மைதிலி குசு குசுவென்று ராகவனிடம் ரகசியம் பேசினாள். சியாமளாவும் அவள் குழந்தைகளும் பக்கத்து போர்ஷனில் படுத்து விட்டனர். வெளியே வேப்ப மரத்தடியில் ஈஸிசேரில் படுத்திருந்த மங்களத்திடம் வந்த ராகவன்," அம்மா, நான் ரொம்ப யோசிச்சுட்டேன், என்னாலே இவாள வச்சு காப்பாத்த முடியாது, அப்பனே இல்லன்னு ஆன அப்புறம் அவன் வப்பாட்டி குடும்பத்த பத்தி எனக்கு கவல இல்ல. நாளைக்கு நான் ஆபீஸ் விட்டு வரும் போது அவா இங்க இருக்க கூடாது, மைதிலிக்கும் உடம்பு சரியில்ல, அவ வியாதி இவளுக்கும் ஒட்டிக்க போறது, எல்லாம் என் பிராணன வாங்க வந்துடுத்து", என்று உறுமி விட்டு சென்றான். அத்தனையும் கேட்டு கொண்டிருந்த சியாமளா இரவு முழுவதும் அழுததும், நாம இங்க இருந்து போயிடலாம்மா என்று கீதா சொன்னதும் மங்களத்துக்கு தெளிவாக கேட்டது.

பழவந்தாங்கல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய ராகவனின் கண்ணில் பட்டது குமார். " என்னடா, ஊர் சுத்தறயா? " என்றவனுக்கு கிடைத்த பதில், " இல்லப்பா, பாட்டியையும் அவாளயும் ஊருக்கு, கும்மோணத்துக்கு ரயில்ல ஏத்தி அனுப்பிட்டு வரேன்".



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum