Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

Asthamanam Thedi

Topic started by sivank on Tue Dec 16 16:04:37 2008. [Full View]

அஸ்தமனம் தேடி

சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கமலத்துக்கு தலை விண் விண் என வலித்தது. சூடாக ஒரு லோட்டா காபி குடிப்போம் என்றால், நாக்கில் ஜலம் பட குறைந்த பட்சம் நாலு மணி நேரமாவது ஆகும். கிழவியை இன்னும் ஆஸ்பத்திரியில் இருந்தே கொண்டுவரவில்லை, செய்தி சொல்ல பேர பிள்ளைகள் சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும் போய் இருக்கிறார்கள். வீடு எங்கும் வித விதமான அழுகை ஒலி. ஒரு வித பயத்தோடு அழுது கொண்டிருக்கும் புது நாட்டுபெண்ணை பார்த்தால் பாவமாக இருக்கிறது, கல்யாணம் முடிந்த நாலாவது நாள் இப்படி ஒரு துக்க சம்பவம். பத்து வருஷமாக இழுத்து கொண்டிருந்த கிழவி இப்போது தானா மண்டையை போட வேண்டும், ஏதோ இவளாவது என்னை மாதிரி அதிர்ஷ்டகட்டையாக இல்லாமல் இருந்தால் சரி.

" பெண்டுகளா, யாரும் அழப்படாது. பாட்டி நம்மள விட்டு போக மாட்டா, இங்கேயே தான் இருப்பா. கல்யாண சாவுக்காரா அவ்ளோ சீக்கிரம் போய்ட மாட்டா. எலே, வாத்யாருக்கு சொல்லியாச்சா, அந்த மாயாண்டி பயல வரச்சொல்லு. எங்க போனான் இந்த தடிப்பய வரது?" பெரியவரின் வெண்கல குரல் திடீரென தாக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்த கமலம் கண்களால் அந்த "தடிப்பய வரது" வை தேடினாள்.

கை நிறைய பச்சை மூங்கில்களோடு வந்த வரது பெரியவரின் குரல் கேட்டு உள்ளே போனான். பின் கட்டில் இருந்த கமலத்திற்க்கு பெரியவர் இரைவதும் அவள் கணவன் வரது கம்மிய குரலில் ஏதோ சொல்வதும் கேட்டது. வரது கிழவிக்கு ஏதோ வகையில் சொந்தம். சிறு வயதில் தாய் தந்தையரை விபத்தில் இழந்ததில் இருந்தே அங்கு தான் வளர்ந்து வந்தான். என்ன பார்தானோ வந்ததில் இருந்தே மந்தமாகவே வளர்ந்து விட்டான். படிப்பிலும் நாட்டம் இல்லை, மற்ற பிள்ளைகளை போல விளயாட்டிலும் நாட்டம் இல்லாமல் எப்போதும் மோட்டுவளையை பார்த்துக்கொண்டே இருந்தான். திருவிடைமருதூர் மகாலிங்கத்தின் மீது அப்படி என்ன ஆசையோ, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அங்கு ஓடி போய் விடுவான். நாள் கணக்கில் கோவிலிலேயே யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்த காரணம் அந்த மஹாலிங்கதுக்கும் சோழன் வருகைக்காக காத்திருக்கும் அந்த பிரம்மஹத்திக்கும் தான் தெரியும். கிழவி யார் யாரயோ கெஞ்சி வாங்கி கொடுத்த வேலையெல்லாம் ஒரு சில வாரங்களே நிலைத்தன. கல்யாணம் செய்தால் பொறுப்பு வரும் என்று யாரோ ஒரு புண்யவான் சொன்னதை கேட்டு கமலத்தை அவனுக்கு தாரை வார்த்து அவள் வாழ்க்கையையும் மண்ணாக்கினாள். கமலம் ஆனால் வெகு கெட்டிக்காரி, இப்படிப்பட்ட கணவனே குழந்தையாக இருக்கும் போது வேறு குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுத்து வைராக்கியதுடன் இருந்தாள். கிழவி நடமாடி கொண்டிருந்தபோதே மற்றவர்களால் அழையா விருந்தாளியாக கருதப்பட்ட கமலம் அத்தனை வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தாள். குழந்தைகளுக்கு கமலம் பெரியம்மா கையால் கதை கேட்டு கொண்டு சாப்பிட்டால் ஒரு அலாதி சுகம். நாளாக நாளாக சொந்தகாரர்களும் தெரிந்தவர்களும் ஒரு விசேஷம் என்றால் கமலம் வரது தம்பதிகளை வரவேற்க்க ஆரம்பித்தனர். அழைப்பின் உண்மை காரணத்தை உணர்ந்த கமலமும் மாங்கு மாங்கென உழைத்தாள். இப்படி இருந்த வேளையில் தான் ஆதரவாக இருந்த கிழவியும் மண்டையை போட்டாள்.

காரியமெல்லாம் முடிந்து கிழவியும் கைப்பிடி சாம்பலாய் போன பின் வீடு முழுவதையும் அலம்பி சாப்பாட்டு கடையையும் முடித்தபிறகு பின்கட்டில் அம்பாரமாய் இருந்த பாத்திரங்களை தேய்க்க வந்த கமலம் அங்கு கண்ணில் நீர் பளபளக்க உட்கார்ந்திருந்த வரதுவை பார்த்து திடுக்கிட்டு போனாள். என்ன நடந்தாலும் சலனமே காட்டாமல் இருக்கும் வரது இப்படி இருப்பது மனதை என்னவோ செய்தது.

"என்னன்னா, ஆச்சு? என்னமோ போல இருக்கேளே, சாப்டேளா?"

"இல்லடி, யாரும் சாப்பிட கூப்பிடல, கேக்கவும் என்னமோ மாதிரி இருந்தது. பெரியவரும் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார். ஒன்னுமே புரியலடி, பாட்டி போனதுலேந்து எல்லாமே மாறி போச்சுடி"

"அசடாட்டம் பேசாதேங்கோ, நான் போய் கொஞ்சமா ரசம்சாதம் கரச்சுண்டு வரேன், சாப்டுட்டு போய் தூங்குங்கோ, நான் கை வேலை முடிச்சிண்டு வரேன். நாளைக்கு எல்லாம் சரியா போயிடும்."

"நான் படுக்க போறேண்டி, என்னமோ சாப்டவே பிடிக்கல, நீ மெதுவா வா," என்று கூறி தடுமாறி உள்ளே போன வரதுவை பார்த்தவாறே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள் கமலம்.

தூங்கி கொண்டிருந்த வரது யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து கண் விழித்து பார்த்தால் மலர்ந்த முகத்தோடு எதிரே கமலம் இருந்தாள். "பாட்டியோட காரியம் முடியட்டும், நாம ரெண்டு பேரும் திருவிடைமருதூருக்கே போயிடுவோம். எல்லாருக்கும் படியளக்கற மகாலிங்கம் நமக்கும் ஒரு வழி காட்டாமயா போயிடுவார். மிச்சம் மீதி இருக்கற வாழ்நாள அங்கேயே கழிச்சுடுவோம். என்ன சொல்றேள்?"

வரதுவின் கண்களில் தெரிந்த ஒளியும் அவன் கமலத்தின் கையை அழுத்திய வேகமும் அவளுக்கு மிகவும் புதியதாக இருந்தது



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum